Skip to main content

அடுத்தவர்களின் வட்டத்திற்குள்.....






பால்கனியின் கம்பியில்
வெள்ளை புறா
தன் முகத்தின் முன்னே
மேலிருந்து கீழாக
வலை பின்னும் சிலந்தியை
உற்றுப் பார்த்தபடி....

சிலந்தியோ புறாவின் தலையை சுற்றி
வலை பின்னத் தொடங்க
புறாவும் தலையை அங்கும் இங்குமாக
நகர்த்தியும் திருப்பியும்
சிலந்தியை ஒதுக்க....
சிலந்தி பிடிவாதமாய்
வலையை சுற்ற
சடக்கென்ற புறாவின் கொத்தலில்
காணாமல் போனது சிலந்தி.......

இதை காணும் போது
முந்தைய நாளின் சம்பவம் ஒன்று
நினைவில் நிழலாடியது

பக்கத்து வீட்டு குழந்தையும்
அவர்களின் டாபர்மெனும்....

குழந்தை கையில் எடுக்கும் அனைத்தும்
நாய் பிடுங்குவதும் எறிவதுமாக
அருமையாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்....

குழந்தையின் அம்மா சாப்பிட வைத்துச்சென்ற
பிஸ்கட்டை குழந்தை கையில் எடுக்க
அதையும் செல்ல பிராணி பிடுங்க...

எடுப்பதும் பிடுங்குவதும் தொடர  
நாயின் இந்த செயலுக்கு
குழந்தையின் சிரித்த முகம்
சிவந்த முகமாக மாற தொடங்கி
கையில் கிடைத்த பொம்மையை
குழந்தை நாயின் மேல் வீச
அது அப்படியே பின்பக்கமாக
நடந்து ஒதுங்க.....

குழந்தையின் சிரிப்பை மீறிய
ஒரு சிறிய கோபம்
தன் சுயத்திற்கானது...

புறாவின் பொறுமை மீறிய
ஒரு சிறிய கோபம் கூட  
அதன் சுயதிற்குதான்....
இரண்டுமே ஒன்றுதான்...
இரண்டுமே நியாயம்தான்....

அடுத்தவர்களின் வட்டத்திற்குள்
அடியெடுத்து வைக்காதவரை
எல்லாமே அழகுதான்...




  

Comments

  1. பீர்பால்,முல்லா கதைகளில் மட்டுமே நாம் moral story யாக படித்து இருக்கிறோம் ,ஆனால் அவற்றின் காலம் நாம் கண்டிராதவை ,ஆனால் கண்ணில் கண்ட ஒரு காட்சியை அருமையாகmoral story யாக ஆக்கிய விதம் அருமை ...

    ReplyDelete
  2. அழகாக சொன்னீர்கள் அகிலா...
    நம்முடைய எந்த ஒரு செயலும் பிறரது எல்லையை மீறாததாக இருக்கவேண்டும்... அப்படிப்பட்ட ஒரு செயல் தான் நம்முடைய பாதுக்காப்பும் கூட சுயநலம் என்ற பெயரை நமக்கு வாங்கி தந்து விடுகிறது... இயற்கையான செயலை வைத்து மிக அற்புதமாக சொல்லிவிட்டீர்கள்.. உங்களுக்கு என் பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நிஜம் தான் தேவாதி ராஜன்....

      Delete
  3. இரண்டுமே ஒன்றுதான்...
    இரண்டுமே நியாயம்தான்....

    அடுத்தவர்களின் வட்டத்திற்குள்
    அடியெடுத்து வைக்காதவரை
    எல்லாமே அழகுதான்...

    அழகான வரிகள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி இராஜேஸ்வரி.....

      Delete
  4. நம்மை சீண்டாதவரை நாம் பொறுமையின் எல்லைதான் சீண்டிவிட்டால் அதுவே நமக்கு அவப்பெயர் ஏற்படுத்திவிடும்.அடுத்தவர்கள் வட்டத்திற்குள் அடியெடுத்து வைக்காதலரை எல்லாம் அழகுதான்.
    அழகான வரிகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

கவிதை மொழிபெயர்ப்பு

பாப்லா நெருடா கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன். கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர். அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டு...