Skip to main content

இங்கிலாந்தில் நான்: பார்வை 1

கற்பிதங்களை உடைத்தல்  





'ஒரு இட்லி உண்டா, பொங்கல் உண்டா..'

'வறட் வறட்டென்று பிரேட்டை காலையில் சாப்பிடுகிறார்கள் வெளிநாட்டுக்காரங்க..'

'நீங்க அங்க போனா என்ன சாப்பிடுவீங்க..'

என்றெல்லாம் என் UK பயணங்களுக்குப் பிறகு, இங்கிலாந்தின் உணவு முறை சார்ந்து என்னை நோக்கி கேள்விகள் வந்திருக்கின்றன. நேற்றும் கூட என்னிடம் பேசிய பிரண்ட் ஒருத்தி, 'நீ போயிருக்கேயில்ல, பிள்ளைகளுக்கு நல்ல சாப்பாடு செஞ்சு கொடு' என்றாள். அப்ப, இந்தியா தவிர்த்த வெளிநாடுகளில் மக்கள் சாப்பிடுவதெல்லாம் கெட்டது என்று எப்படி இவர்களாக முடிவு செய்துக்கொள்கிறார்கள் என்று புரியவில்லை. இது குறித்து பட்டிமன்றங்களிலும் விவாதங்களிலும் கூட பேசி சந்தோஷப்பட்டுக் கொள்வதைக் காணமுடியும். இது உணவு சார்ந்து. இது தவிர, அவர்களின் திருமண வாழ்வு சார்ந்து, ஆண்-பெண் நட்பு/உறவு சார்ந்து பல அனுமானங்களுடன் என்னிடம் கேட்டவர்கள் அதிகம். உலகில் வாழும் மற்றவர்களின் பண்பாடு, சமூகம் போன்றவைக் குறித்த தாழ்வான கருத்துகள் நம்மிடையே நிலவுவதும், நம் கலாசாரம்தான் சிறந்தது என்று கொடி பிடிப்பதும் அபத்தமென நினைக்கிறேன். அவர்களுக்குள்ளும் பாசம், அன்பு, உறவின் மீதான பிடிப்பு, மகன் மகள் அக்கா தங்கை அண்ணன் தம்பி என்ற அரவணைப்புகள், பேரன் பேத்திகளைக் கவனித்துக்கொள்ளுதல், பள்ளிக்குக் கொண்டு விடுதல், கூட்டி வருதல், விடுமுறை தினங்களில் பாட்டி தாத்தா வீடுகளில் பிள்ளைகளைக் கொண்டு விடுதல் என்ற அனைத்து குடும்ப கூறுகளும் உண்டு. கணவன் மனைவி உறவுகளில் பிணக்கம் வந்தால், "ஹாய்", "Bye" என்று எளிதாய் எல்லாம் சொல்லிவிட்டு சென்றுவிட மாட்டார்கள். அவர்களுக்குள்ளும் கவலை, அழுகை, உறவிலிருந்து வெளிவர இயலாமல் தவித்தல் என்ற மனிதர்களுக்கான எல்லா அம்சங்களும் உண்டு. நாம் மட்டுமே அழுவோம், நாம் மட்டுமே சிரிப்போம் என்ற குறுகிய மனப்பாங்கை விட்டு வெளியே வருவோம். வெப்ப மண்டல நாடுகளைப் (Tropical countries) போலவே, மிதவெப்ப மண்டல நாடுகளோ (Temperate countries), குளிர் மண்டல நாடுகளோ (Polar) வறண்ட பிரதேசங்களோ (Desert/Arid/Semi Arid) இருக்காது. அங்கு, அந்தந்த தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, நிலமும் அதனதன் மனிதர்களும், அவர்களின் பழக்கவழக்கங்களும், உணர்வுகளும், உணவு வகைகளும், உடைகளும் வேறுபடக்கூடும். அதீத குளிர் சில நேரங்களில், உணர்வுகள் அடங்கிய, புத்தனின் மௌன நிலையை நமக்குக் கொடுக்கக்கூடும். அதை நான் உணர்ந்திருக்கிறேன்.



இன்று காலை கூட நான் பிரெட் டோஸ்ட் செய்து வெண்ணெயுடன் வைத்து சாப்பிட்டேன். இதை சொல்லிக்கொள்வதில் எனக்கு எந்த சங்கடங்களும் இல்லை. மழை வேறு சள்ளென்று பெய்து கொண்டிருக்கிறது. Yellow warning நாங்க இருக்கும் டவுனுக்கு வடமேற்கில் இருக்கும் பகுதிகளுக்குக் கொடுத்திருக்கிறார்கள். நாளை காலை வரை மழை + குளிர்தான். காலைவேளையில் சள்ளையாய் நம்மைச் சுற்றியிருக்கும் இந்த குளிரில், சூடாக, கொதிக்க கொதிக்க, இட்லி, சாம்பார், பொங்கல், வடை என்று சாப்பிடுவது முடியாது. எளிதாய் இருப்பதையே எடுத்துக்கொள்ள தோன்றும். காரமாக மிக்சர் சிப்ஸ் வகையறாக்களை உள்ளே விடுவோம் என்று நாம் நினைத்தாலும் அவை சில்லென்று stale food போல இருக்கும். அதன் காரமெல்லாம் நம் உணர்வுக்குள் ஏறாமல், குளிர்ந்த தன்மைதான் நம்மை தொடும் முதலில். இவையெல்லாம் இப்பிரதேசத்தின் தட்பவெப்பநிலையின் தன்மையைச் சுட்டிக்காட்டவே எழுதுகிறேன்.

வெயிலைப் போலவே குளிருக்கும் சில சடவுகள் நம்முள் ஏற்படுவதுண்டு என்பதை புரிந்து கொண்டால் தொடக்கத்தில் எழுப்பிய கேள்விகள் எல்லாம் இல்லாமல் போகும்...

உலகம் ரொம்ப விசாலமானது 🌍




Comments

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

கவிதை மொழிபெயர்ப்பு

பாப்லா நெருடா கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன். கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர். அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டு...