Skip to main content

அறவி புதினம் குறித்து புத்தகத் திறனாய்வு நிகழ்வு - முனைவர் பெண்ணியம் பிரேமா

 அறவி: ஓர் பார்வை 


காணொளி லிங்க்:

அறவி : ஓர் பார்வை


அறவி புதினம் குறித்த புத்தகத் திறனாய்வு - இணைய நிகழ்வு, வாருங்கள் படிப்போம் குழுவினரால் நிகழ்ந்தது நேற்று (18.11.2023, 7.30 pm) 

அறவி குறித்த கதைக்களத்தை விவரித்த முனைவர் பிரேமா அவர்கள், கதையின் பாடுபொருளை, கதை அமைப்பை, கதைக்களங்களான திருச்செந்தூர் மற்றும் இங்கிலாந்தில் நார்தம்ப்டன் சூழல் விவரிப்பின் நேர்த்தியையும் வெகுவாக பாராட்டினார். 

பெண்களின் இன்றைய நிலைப்பாடுகள், பெண்ணியத்தின் புதிய சிந்தனைகள் என்று நேற்றைய அறவி புத்தகத் திறனாய்வின் பக்கங்களை, அவற்றை நோக்கிய கேள்விகளுக்கான விடைகளுடன் மேடையாக்கி, 'பெண்ணியம்' பிரேமா அவர்களால் அருமையாக மாற்றிக்கொடுக்க முடிந்தது வியப்பே. 

இந்த புதினத்தின் தலைப்பால், அறவி என்பது இல்லறத்துள் பெண் துறவைக் குறிக்கும் சொல்லாக மாறியிருப்பதாக அவர்கள் உரைத்தபோது மகிழ்வாக இருந்தது. 

பெண்ணின் உடலியல் பிரச்சனைகளைப் பேசும் ஒரு புதினத்தால், அவளின் வெளியழகை பேசாமல், அவளின் அகத்தை மட்டும் பேசியிருப்பது, பெண்ணை முன்னிலைப்படுத்திய புதினங்களில் என் பார்வையில் இதுவரை யாரும் இவ்வாறு எழுதியதில்லை என்று அவர் பேசியபோது, பெண்ணின் உள்ளிருக்கும் உணர்வை இப்புதினத்தின் வழி சரிவர கையாண்டிருக்கிறேன் போலும் என்று நினைத்தேன். 

கதைநெசவு நன்றாக வந்திருக்கிறது என்றும் சொன்னபோது, அந்த சொல் 'கதைநெசவு' எனக்குப் பிடித்திருந்தது. 

ஒத்த கருத்துடைய சிலரால் மட்டுமே உணர்வுபூர்வமாக மட்டும் ஒட்டிக்கொள்ளாமல் அறிவார்த்தமாக, நாவலின் உள்ளீடு என்ன சொல்கிறது என்பதைப் புரிந்துக்கொள்ளும் வித்தையைச் செய்யமுடியும். முதலில் காலச்சுவடு பதிப்பகத்தில் நூலை வாசித்து அவர்கள் உரைத்த கருத்துகள், இரண்டாவதாக பிரேமா அவர்களின் உரை முன்வைத்த கருத்துகள்.. இவை இரண்டுமே சரிவர புதினத்தை எடுத்தாண்டன என்று கொள்ளலாம். 

காலச்சுவடு பதிப்பகம் மற்றும் முனைவர் பிரேமா அவர்களுக்கு என் பேரன்பு ❤️💖

 நேற்றைய தினம் எனக்கு, பெண்ணிலிருந்து வேறுபட்டு, 'ஆணின் பார்வையில் பெண்' என்னும் அடுத்த முயற்சி குறித்து சிந்திக்க வழிவகையும் செய்தது எனலாம். 

புத்தகத் திறனாய்வைத் தொடர்ந்து முன்னெடுக்கும் ஒளிவண்ணன் மற்றும் உமா மகேஸ்வரி அவர்களின் வாருங்கள் படிப்போம் குழுவிற்கு என் அன்பை உரித்தாக்குகிறேன். குழுவின் அர்ஷா மற்றும் ரெஜினா அவர்களுக்கும் என் அன்பு. 🧡🧡

கலந்துக்கொண்ட, அதன் பிறகு என்னோட உரையாடிய (அதில் சிலர் யூடியூப் வழியாகவும் பார்த்திருந்தனர்) வாசகர்கள், பேராசிரியர்கள் எல்லோருக்கும் என் அன்பு. 🤎🤎

அறவி நாவல் காலச்சுவடு பதிப்பகத்தில் Kalachuvadu, Commonfolks, Panuval Bookstore, Dialforbooks, Amazon என்று எல்லா தளங்களிலும் கிடைக்கும். 

புத்தகத் திறனாய்வு காணொளியின் லிங்க் முதல் பின்னூட்டத்தில் கொடுத்துள்ளேன்.. நேற்று ஜும்மில் இணைய இயலாதவர்கள் பார்க்கலாம்.. 

அறவி : ஓர் பார்வை 



Comments

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

கவிதை மொழிபெயர்ப்பு

பாப்லா நெருடா கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன். கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர். அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டு...