Skip to main content

பெண் இலக்கியவாதிகளின் நடைமுறை பிரச்சனைகள்..




இலக்கியங்களில் புழங்கி வரும் பெண்கள் அநேகம். அவர்களைப் பற்றிய அறிமுகங்கள் அதிகமாய்  இருக்கிறதா என்றால் இல்லை என்பதே என் பதில். மிக குறைவாகவே இருக்கின்றன என்பதை மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.


சிறிய பிரச்சனையை முதலில் பார்ப்போம்..

ஞாயிறுகளில் நடத்தப்படும் இலக்கிய நிகழ்வுகளில் தான் பேசும் நிலை இருந்தால் மட்டுமே பெண்கள் கலந்துக் கொள்வதைப் பார்க்கிறேன். நானும் அவ்வாறே. வீட்டு சுமைகளைத் தாண்டி, அன்றைய பொழுது வெளிவர பெரிய ஆயத்தம் மேற்கொள்ளவேண்டியுள்ளது. நான் சமூகவெளியிலும் இயங்குவதால், வேறு வழியில்லாமல் எனக்கு அனுமதி கிடைத்துவிடுகிறது.

ஒரு ஆண், ஞாயிறு அன்று வெளியே செல்கிறான் என்றால், கேட்பவருக்கெல்லாம் அவர் சகதர்மினி, 'அவரு கூட்டத்துக்கு போயிருக்காரு. அவருக்கு வேறு வேலையே இல்லை..' என்னும் பதில் கூறக்கூடும். அதை கேட்பவர்களும் 'இருக்கட்டும், விடுங்க.. என்று எளிதாய் எடுத்துக்கொள்ளக்கூடும்.

இதே நிலையில், ஒரு பெண் சென்றால், அடுத்த நாள் அவளை சந்திக்கும் ஒருவர், 'உங்க வீட்டுக்காரரை நேத்து சூப்பர் மார்கெட்டில் பார்த்தேன். நீங்க வீட்டுல இல்லைன்னு சொன்னார். பாவமாக (!) இருந்தது. ஞாயிற்றுகிழமை ஒரு நாள் தான் வீட்டுல இருப்பாங்க எல்லோரும். அன்னைக்கும் நீங்க வெளியே போனால் என்ன ஆவது..' அப்படிப்பாங்க. 

வீட்டுல இருக்கிறவங்க கூட இப்படி எங்களை சொல்லமாட்டாங்க, வெளியே இருக்கிறவங்க சொல்லுவாங்க என்பது தான் உண்மை. இதுதான் ஒரு பெண் இலக்கியவாதியின் நிலை. சமூகத்தின் பார்வை சற்று மாறவேண்டும்.


சரி, இனி பெரிய பிரச்சனைக்கு வருவோம்..

ஓரிரு நூல்கள் எழுதியிருந்தாலும் ஆண் என்பவன் தான் ஒரு எழுத்தாளன் என்பதை எல்லா இலக்கிய அவைகளில், கூட்டங்களில் பறைசாற்றும் வசதியும் புத்திசாலித்தனமும் பெற்றிருக்கிறான். அனைவரோடும் கலந்துரையாடுகிறான். அவ்வப்போது எல்லாரோடும் அளவளாவுகிறான். தானும் இலக்கியத்துக்குள் இருப்பதை பிரகடனபடுத்தி விடுகிறான். பஸ்ஸ்டாண்ட், டீக்கடை என்று சந்திப்புகளை இலக்கிய சந்திப்பு தவிர நீட்டித்துக் கொள்கிறான்.

பெண்ணுக்கு அப்படி அமைவதில்லை. ஒரு பெண் எழுத்தாளாராய் இருக்கும் பட்சத்தில், அவர் குடியிருக்கும் ஊர் மற்றும் அக்கம் பக்கம் இருக்கும் இலக்கிய வட்டங்களில் மட்டுமே பேசப்படுகிறாள். அதை மீறி அவள் ஜோல்னா பை (இப்போது பெரிய ஹாண்ட்பேக்) சகிதமாக பயணித்தல் முன்பெல்லாம் இயலாத காரியம். மிகவும் பிரபலமானவர்களுக்கு மட்டுமே அது முடிந்திருக்கிறது.

இன்று இருக்கும் நிலை வேறு. சமூக வலைத்தளங்கள் எல்லோரையும் எல்லைகள் தாண்டி பிரபலபடுத்திவிடுகின்றன. இன்று வெவ்வேறு ஊர்களில் இருந்து வரும் அழைப்புக்களுக்கு சற்று செவி சாய்த்து சென்றுவருகிறோம். 

இதே முறை இருபது, முப்பது வருடங்களுக்கு முன் எழுதிக்கொண்டிருந்த, இன்றும் அந்த எழுத்தை தொடர்ந்தும், தொடர முடியாமலும் இருக்கிற பெண் எழுத்தாளர்களுக்கு பொருந்தாது. அவர்களின் அறிமுகங்கள் யாராவது ஏற்பாடு செய்துக் கொடுத்தால் மட்டுமே முடிகிறது. 

சமீபத்திய கோவை இலக்கிய சந்திப்பில், வயதில் மூத்த மூன்று பெண் எழுத்தாளர்களைச் சந்திக்கும் பாக்கியம் அமைந்தது. விஜயலட்சுமி சுந்தராஜன், சாந்தா ராஜன் மற்றும் உஷா வெங்கட்ராமன். டில்லி மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் வசித்தவர்கள். அந்தந்த இடங்களில் பிரபலமானவர்கள். இப்போது வசிப்பது கோவையில். மகிழ்வான விஷயம்தான் கோவையில்  வசிக்கும்  எங்களைப் போன்ற பெண் எழுத்தாளர்களுக்கு.

பெண் எழுத்தாளர்களின் எல்லை விரிவடையவேண்டும். இப்போது எழுதுபவர்களுக்கு, முன்பு எழுதியவர்களின் நேர் அறிமுகங்கள் வேண்டும். 


இன்னும் பெண்கள் அதிகமாய் இலக்கியத்திற்குள் வரவேண்டும் என்பது என் கோரிக்கை அல்ல. எழுதிக்கொண்டிருக்கும் பெண்கள் வெளியே வரவேண்டும். இலக்கிய கூட்டங்களில் ஆண்களுக்கு நிகராய் எண்ண பரிமாற்றங்கள், கருத்து கலப்புகள் செய்து கொள்ளவேண்டும் என்பது என் அவா. 

அப்போதுதான் ஆண், பெண் எழுத்துகள், பால் இன பாகுபாடுகள் மறையும் என்பது என் கருத்து. இந்த மாதிரி பதிவுக்கும் அவசியமிருக்காது. 








Comments

  1. நிதர்சனம் சொல்லும் கட்டுரை. மிக உண்மை.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்...மனதில் பட்ட விஷயம்

      Delete
  2. உண்மையை அழகாக எடுத்து வைத்திருக்கிறீர்கள்......

    இன்று தமிழில் இலக்கியம் என்றால் ஜெயமோகன் சாரு ராமகிருஷ்ணன் என்பவர்களின் படைப்புகளை மட்டும் படித்துவிட்டு ஒரு குறுகிய வட்டத்திற்குள் அதாவது கிணற்று தவளைகள் போல கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை தவிர பலரும் பல இலக்கிய படைப்புகளை தொடர்ந்து படைத்து கொண்டிருக்கின்றனர்.. அதை தேடிப் படிக்காமல் பலரும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். பெரிய அளவில் பேசப்படுபவர்கள் எழுதுவது மட்டுமே இலக்கியம் என்று சொல்லி திரியும் பலர் உண்டு. அதுவும் கூட்டத்திற்கு தாடியும் தலைமுடி லூசாகவும் விட்டு வரும் ஆண்மக்களுக்கு இருக்கும் சிறப்பே தனி. எத்தனையோ திறமையானவர்கள் மறைந்துகிடக்கிரார்கள் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை.

      Delete
  3. அருமையான பதிவு
    காலம் பதில் சொல்லும்

    கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
    http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

பெண்ணுடலின் மீது மட்டும் ஏன் இத்தனை வன்முறை?

  பாலியல் வன்முறை ஐந்தாறு நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தது, பெண்ணுடல் குறித்த சமூக தகவமைப்பு. கல்கத்தா மருத்துவர் மௌமிதா மீது நடத்தப்பட்ட மிக கொடுரமான பாலியல் வல்லுறவு வன்முறை அது. பெங்கால் ஆளும் கட்சியும், மத்தியில் இருக்கும் கட்சியும், பெங்கால் காவல்துறையும் இந்த வன்முறை குறித்து, மாறிமாறி ஒவ்வொரு விதமான குற்றச்சாட்டுகளை மற்றவர்கள் மீது முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மருத்துவக் கல்லூரியின் பிரின்சிபால் சந்தீப் கோஷ் விசாரணையில் இருக்கிறார். பெண் பித்து பிடித்த சஞ்சய் ராயை கைது செய்கிறார்கள். இந்த சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி வளாகம் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவ சமூகமே இன்று கொதித்து நிற்கிறது. உயிர் காக்கும் தொழில் என்பதால் இந்த போராட்டம் கவனப்படுத்தப்படுகிறது. காவல்துறையை தன் கைவசம் வைத்திருக்கும் மாநில அரசின் முதலமைச்சர், களத்தில் கொடி பிடிக்கும் பெண்களோடு கை கோர்த்து நின்று காமெடி செய்து, நடந்த கொடுரூரத்தைத் திசை மாற்ற முயற்சிப்பதை எல்லோரும் வேடிக்கை கூத்தாக பார்க்கிறோம். பெண்ணுக்கு எதிரான, பெண்ணுடலுக்கு எதிரான, பெண் சமூகத்துக்கு எதிரான கேலிக்கூ...