Skip to main content

கைம்பெண்ணும் தபுதாரனும்..



சமீபத்தில் வந்த ஓரு விழாவுக்கான அழைப்பிதழில், 'விதவையர் நல சங்கம்' என்ற சொற்கள் கண்ணில் பட்டது.

விதவை என்னும் சொல்  மனதுள் ஒரு சிறு கோபம் கலந்த வருத்தம் தோற்றுவித்ததை மறுப்பதற்கில்லை. விதவை என்னும் சொல்லை ஒழித்து குடும்பத்திற்கான நல சங்கமாக மாற்றலாம். அந்த பெண்களை மட்டும் குறிக்க வேண்டுமானால், அவளை பெண் என்பதை பறைசாற்றும் வேறு சொற்களைக் கொண்டு அடையாளப்படுத்துங்கள்.

துணைவியர், இல்லத்தரசிகள் என்று நிறைய சொற்கள் இருக்கும்போது இன்னும் எதற்கு அந்த சொல்? இல்லையென்றால், இவை, துணைவியார், இல்லத்தரசி போன்ற சொற்கள், இந்து ஆகம சட்டத்தின் படி சுமங்கலிகளை மட்டுமே குறிக்கும் சொற்களா என்ன.. கணவனை இழந்தால் அந்த பெண்கள் வாழ தகுதியற்று போய்விட்டார்களா என்ன.

திருமணம்தான் ஒரு பெண்ணை, அவள் வாழ்வைத் தீர்மானிக்கும் என்றால், அதையும் ஆண், பெண் இருவருக்கும் பொதுவில் வைப்போம். அதை நடைமுறையில் சாத்தியபடுத்த விரும்பாதவர்களால்தான் பெண்கள் மட்டும் பலியாகிறார்கள்.     

மறுமணங்கள் புழக்கத்தில் இருக்கும் இந்த காலகட்டத்திலும், பெண்களை விதவை என்று இவ்வாறு முத்திரை குத்தும் பழக்கம் இன்னும் முடியவில்லை. ஆணை விட பொருளாதாரத்தில் பெண் பின்தங்கியிருக்கும் வரை இது தொடரும் என்றே தோன்றுகிறது.

இன்று கணவனை இழந்த பலர் கைத்தொழில் மற்றும் வீட்டு வேலைகள் செய்து சுயமாய் வாழ்கிறார்கள். அப்போது அவளும் ஆணைப் போலவே சுயமாய் வாழ உரிமை இருக்கிறது அல்லவா. அப்புறம் எதற்காக பழைய வாழ்க்கையின் இழப்பை சொல்லிக்காட்டும் சொற்கள்.. அவளாக அவனோடு வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகளோடு மனதால் வாழ்வது வேறு. சமூகமாக சேர்ந்து ஒரு சொல்லைக் கொண்டு அவளை வாழ தகுதியற்றவள் என்பது வேறு.

விதவை, கைம்பெண் என்பதன் ஆண்பாற் சொல் தபுதாரன் என்பது. அது வழக்கொழிந்து போனது. காரணம், ஆண்கள், மனைவியின் மறைவுக்கு பின், பிற பெண்களை மணந்து கொண்டதாலும், மனைவி உயிருடன் இருக்கும்போதே பல பெண்களை மணந்து கொள்வதாலும் தபுதாரன் என்ற இச்சொல் வழக்கொழிந்து போய்விட்டதாய் நூல்கள் சுட்டுகின்றன.

இந்து தர்ம சாஸ்திரம் கூறுவதுபடி, திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவன், மனைவியை இழந்தவன் இவர்களை சுபகாரியங்களில் முன்னிறுத்தக்கூடாது. இதையெல்லாம், பெண்களுக்கு மட்டும் சாத்திவிட்டுஆண்கள் இந்த வழக்கத்தில் இருந்து எல்லாம் விடுதலை பெற்றுக்கொண்டார்கள்.

இன்றும் கணவன் இழந்த பெண்கள் தன் பிள்ளைகளின் திருமண சபைக்கு கூட வர இயலாதவராய் தூணுக்கு பின் நிற்கும் நிலை பல ஊர்களில் இருக்கின்றன. பட்டபடிப்பு முடித்து வீட்டில் அடைப்பட்டுப் போன ஒரு பெண்ணால் கூட இந்த விஷயத்தில் அவளாகவே சுயமாய் நிமிர முடிவதில்லை. அந்த அளவுக்கு அவளின் அடி மனதில் கற்கள் கொண்டு கட்டப்பட்டு பலமாய் அஸ்திவாரம் போடப்பட்டுள்ளது சமுகத்தால்.

அதிகமாய் பெண்களிடையேதான் விழிப்புணர்வு தேவைபடுகிறது. ராஜாராம் மோகன்ராய் ஒழித்த உடன்கட்டை ஏறுதல் போன்ற சாபக்கேடுகளைப் போலவே இந்த சொற்களும் அதன் பின் நடைபெறும் அமங்கலமான நிகழ்வுகளும் இருக்கின்றன.

யாராவது ஒரு ஆண் இறந்தால், ஊரில் வேலை வெட்டி இல்லாமல் உட்கார்ந்திருக்கும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பொழுதுபோக்க, அந்த பெண்ணை அதன்பின் வரும் நாட்களில் துன்புறுத்தி பார்க்கும் நிகழ்வுகள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. பல வீடுகளில் பிள்ளைகள், சகோதர சகோதரிகள் வேண்டாம் என்று பிடிவாதமாய் மறுப்பதால் சற்று குறைந்து, இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடக்கிறது.

பழமைவாத சொற்கள் கொண்டு பெண்களை ஒரு சட்டத்துக்குள் அடைப்பதை முடிவுக்குக் கொண்டுவர பிரயத்தனப்படுவோம். கணவன் இறந்தாலும் தன் சுயம் இறப்பதில்லை என்பதை பெண்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.

நம் பெண்கள் கடக்கவும், போராடவும், இன்னும் காததூரம் அல்ல, நெடுந்தொலைவு உள்ளது. அதுவரை வலிமையையும் தன்னம்பிக்கையும் அவர்களுக்கு கொடுப்போம்.




Comments

  1. //இன்றும் கணவன் இழந்த பெண்கள் தன் பிள்ளைகளின் திருமண சபைக்கு கூட வர இயலாதவராய் தூணுக்கு பின் நிற்கும் நிலை பல ஊர்களில் இருக்கின்றன.//

    இது மிகப்பெரிய கொடுமை. அந்த பெற்ற தாயாரைவிட உள்ளன்புடன் அந்த மணமக்களை வேறு யாரால் மனதார வாழ்த்த முடியும்?

    சமுதாயத்தில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.முன்புபோல இல்லாமல் கொடுமைகள் குறைந்துள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். தாங்கள் சொல்வது போல இன்னும் முற்றிலும் இவை மாறவேண்டும். விழிப்புணர்வு தரும் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா..இன்னும் தேங்கியிருக்கும் பெண்களின் சந்தேகங்களை தீர்க்கத்தான் வேண்டும்.

      Delete
  2. http://gopu1949.blogspot.in/2011/09/2-of-2_28.html ['சகுனம்' சிறுகதை பாகம் 2 of 2]

    இதே கருத்துக்களில் சிலவற்றை என்னுடைய மேற்படி சிறுகதைப் பதிவின் முடிவில் பின்குறிப்பாகக் கொடுத்துள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் அய்யா. படித்துப்பார்த்தேன். மகிழ்ச்சி ...எழுத்துகள் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும்.

      Delete
  3. அதுவரை வலிமையும் தன்நம்பிக்கையும் அவர்களுக்கு கொடுப்போம்.

    எங்கே மா

    ReplyDelete
  4. அருமையான சிந்தனையும் கருத்துகளும்,அவர்கள் உண்மைகள் மதுரைத்தமிழன் அவர்கள் பதிவின் மூலம் உங்கள் பதிவைக்குறித்து அறிந்தேன், நன்றுமா!

    ReplyDelete
  5. அருமையான சிந்தனையும் கருத்துகளும்,அவர்கள் உண்மைகள் மதுரைத்தமிழன் அவர்கள் பதிவின் மூலம் உங்கள் பதிவைக்குறித்து அறிந்தேன், நன்றுமா!

    ReplyDelete
  6. புதிய வார்த்தை ஒன்றை அறிமுகம் செய்திருகிறீர்கள் நன்றி

    ReplyDelete
  7. அக்கா.. அருமையான கட்டுரை..
    தொடரட்டும் தங்கள் பணி..

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

கவிதை மொழிபெயர்ப்பு

பாப்லா நெருடா கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன். கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர். அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டு...