Skip to main content

ரயில் பயணங்களில் 4....

   ஒதுங்குவதும் ஒடுங்குவதும் பெண்ணின் தன்மை அல்ல...



பயணங்களின் போது பெண்கள் சந்திக்கும் அதிகமான பிரச்சனைகள் உடன் பயணிக்கும் ஆண்களிடம் இருந்துதான் வரவேண்டும் என்பதில்லை. மிதமிஞ்சிய பொறுமையும் கூட பெண்களுக்கு பிரச்சனைகளைக் கொடுக்கும் என்பதை உணர வேண்டும். ஆண்கள் அனைவரும் உத்தமர்கள் என்று கொள்ளவும் முடியாது. தப்பானவர்கள் என முடிவு பண்ணவும் முடியாது.  

ரயில் பயணங்களின் போது, என் இருக்கையின் அருகில் அமரும் நபர்களை சார்ட்டில் பார்த்துவிட்டுதான் உள்ளே செல்வது என்  வழக்கம். நேற்றைய பயணத்தின் போதும் அப்படித்தான். அருகே 81 வயது மூதாட்டி ஒருவரின் பெயர் பார்த்தேன். அவர் எங்கேயிருந்து பயணிக்கத் தொடங்குகிறார் என்பதை கவனிக்கத் தவறிவிட்டேன். ஏறி அமர்ந்தேன். அருகில் இருக்கை காலியாகவே இருந்தது

அரை மணிநேரம் சென்றிருக்கும். நான்கு கரைவேட்டிக்காரர்கள் வந்தார்கள். என்னருகே ஒருவரும் அருகே மூன்று பேர் அமரும் இருக்கையில் மற்றவர்களும் அமர்ந்துக் கொண்டார்கள். மற்றுமொரு ஐந்து நிமிடத்தில் இன்னும் இரு தொண்டர்கள் அவர்கள் அருகில் வந்து நின்று கொண்டார்கள்.

சில நிமிடங்கள் சென்றிருக்கும் முன் இருக்கை பெண்மணி, தன் இரண்டு குழந்தைகளுடன் வந்திருந்தவர், எழுந்து அந்த மூவரை பார்த்து ‘சீட் தள்ளாதீங்க...கொஞ்சம் ஒழுங்கா இருங்க..’ என்று சத்தமிட்டார்  உடனே நின்று கொண்டிருந்த தொண்டன் ஒருவன், ‘அக்கா...இனி இப்படி நடக்காது அக்கா...’ என்று உளறிக் கொண்டிருந்தான். அந்த பெண்மணியின் முகச்சுளித்தளில் புரிந்து போனது, அவன் எந்த நிலைமையில் இருந்தான் என்பது. அமைதியாக உட்கார்ந்துவிட்டார் அந்த பெண்மணி.

சிறிது நேரம் கழித்து மீண்டும் எழுந்து, தன் சின்னப்பெண்ணை ஜன்னலோரம் அமர செய்து, அவள் இடத்தில் இவர் இடம் மாற்றி உட்கார்ந்தார். அந்த பெண்மணி ஒன்றும் சொல்லாத போதும் நின்று கொண்டிருந்தவன் ‘அக்கா ...சாரி...இனி இப்படி நடக்காது’ என்று ஏதோ உளறிக் கொண்டிருந்தான். அந்த பெண்ணின் பின் அமர்ந்து இருந்தவன் இன்னும் தொந்தரவு கொடுக்க அவர் அவனை பார்த்து முறைத்துவிட்டு திரும்பிக் கொண்டார். தொல்லைகள் அதிகமாவது தெரிந்தது எனக்கு. அந்த பெண்மணியின் அமைதியை அவர்கள் பயன்படுத்துவது தெரிந்தது.

நின்று கொண்டிருந்தவனில் இன்னொருவன் என்னருகே அமர்ந்திருந்தவனிடம் ஒட்டி நின்றுக் கொண்டு ‘நீ கொடுத்து வைச்சவன்...’ என்கிற தொனியில் என் காதில் விழட்டும் என்றே ஏதேதோ சொல்லிக் கொண்டு உட்கார்ந்திருந்தவனை என்னை நோக்கித் தள்ளிக் கொண்டு இருந்தான். இவனும் நமட்டுச் சிரிப்புடன் அமர்ந்திருந்தான். பார்த்தேன். இது சரிபடாது என்று தோன்றியது. எழுந்து நேரே அடுத்த கம்பார்ட்மென்ட்டில் இருந்த டிடி யியை போய் பார்த்து விவரம் சொன்னேன். நான் யாரையும் அங்கே உட்கார வைக்கவில்லையே என்றார். உடன் வந்தார்.

‘எங்கே இங்கே, ரிசர்வர்ட் ஏசி கம்பார்ட்மென்ட்டில் உட்கார்ந்திருக்கீங்க...’என்று கேட்க, ‘எங்க எம்எல்ஏ அங்கே இருக்கார்...அதுதான் நாங்க இங்கே...காலியாதானே இருக்கு, உட்கார்ந்தா என்ன... ’ என்று அதிகாரமாய்க் கேட்க, அவர் சத்தம் போட்டு எல்லோரையும் வெளியே அனுப்பினார்.

பார்த்தால், சிறு விஷயமாகத்தான் தோன்றும். ஆனால் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக நடந்து, மனதளவிலும் உடலளவிலும் சிரமம் உண்டாக்கியிருக்கிறார்கள்.

முதலில் மது அருந்தி பயணிப்பது தவறு, அதனால் மூளை மழுங்கி பெண்களிடம் தகாத முறையில் நடப்பது அதைவிட தவறு, தான் ஒரு அரசியல்வாதி என்கிற போர்வையை போர்த்திக் கொண்டு தப்பிக்க நினைப்பது மிகப்பெரிய தவறு. பொது இடங்களில் மற்றவர்களின் மனம் புண்படாமல் பழகும் ஒழுக்கங்களை எப்போது இவர்கள் கற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.

பெண்களும் ஒரு தவறு ஆரம்பிக்கும் போதே அதை உணர்ந்து நடவடிக்கை எடுக்க உரியவரிடம் சொல்லவேண்டும். நாம் அமைதியாக ஒதுங்கி இருந்தால், யாரும் நம் உதவிக்கு வரமாட்டார்கள். தொந்தரவுகளைத் தாங்கிக் கொண்டு பெண் என்றால் இப்படிதான் பொறுத்து போகவேண்டும் என்று நினைத்து பேசாமல் இருப்பது தவறு.

பயணங்களின் போது பிரச்னை ஏற்படும் பட்சத்தில், யாரிடம் சொன்னால் சரியாகும் என்பதை புத்திசாலித்தனமாக யோசித்துச் செய்யவேண்டும். தள்ளாடுபவனிடம் தர்க்கம் பண்ணி பிரயோஜனம் இல்லை. ஒதுங்குவதும் ஒடுங்குவதும் பெண்ணின் தன்மை இல்லை. தவறுதான் என்பது உறுதியானால் உடனே அதற்கு நடவடிக்கை எடுக்கும் துணிவு பெண்களுக்கு வேண்டும்.

அறிவும் துணிவும் மட்டுமே எப்போதும் எங்கும் 
நம் துணை.  







     

Comments

  1. துணை கொள்ள வேண்டிய கருத்துக்கள் சகோதரி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அறிவும் துணிவும் கைகொடுத்தாலும் அஞ்ச வேண்டிய சிலவற்றுக்கு அஞ்சியாகவேண்டிய நிலை இருக்கிறதே... அதுவும் இந்த அரசியல்வாதிகளிடம் மிகுந்த எச்சரிக்கையாயிருக்க வேண்டியது அவசியம் என்பது என் கருத்து. தங்கள் முந்தைய ரயில் பயண அனுபவங்களையும் வாசித்தேன். அவற்றில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. அனைத்திலும் தங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறேன். துணிவுடன் எண்ணத்தை எழுத்தாய் வெளிப்படுத்தும் தங்கள் பாங்குக்குப் பாராட்டுகள் அகிலா.

    ReplyDelete
    Replies
    1. பெண்ணாய் பிறந்துவிட்டால் சில முரட்டுதனங்களைப் பார்த்து ஒதுங்க வேண்டியிருக்கிறது. கொஞ்சம் யோசனையுடன் தான் செய்ய முடிகிறது.
      உங்களின் வாசிப்புக்கும் பாராட்டுக்கும் நன்றி கீதா...

      Delete
  3. ///அறிவும் துணிவும் மட்டுமே எப்போதும் எங்கும்
    நம் துணை. //

    மிக மிக சரியாக சொல்லி முடித்து இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்களுக்கு...

      Delete
  4. ஆண்களின் மனம் குழம்பிய குளம் குட்டை போலத்தான் மாறி இருக்கிறது அதற்கு மிடியாக்களும் திரைபடங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை மறுக்க முடியாது அப்படி குழம்பிய மனதுடையவர்களுடன் பயணிக்கும் போது பெண்கள்தான் அறிவோடும் துணிவொடும் செயல்பட வேண்டும்.

    ReplyDelete
  5. பதிவிற்கு ஏற்றாற் போல நல்ல படம் இணைத்தற்கும் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...அது தேடதானே நேரம் ஆகுது..நன்றி...

      Delete
  6. உண்மைதான்... எடுக்கும் முடிவு சரியானதாக இருக்க வேண்டும் அக்கா...
    நீங்கள் சரியாகச் செய்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான் குமார்...

      Delete
  7. இந்த பதிவினை பார்க்கும் போது வக்கிறங்களின் உச்சம் கோபத்தை தூண்டுகிறது சாதாரண MLAவாக இருக்கும் போதே அடி பொடிகள் இப்படின்னா இன்னும் பெரிய பதவி வகித்தால் என்னவாகும் இவர்கள் எந்த சூழ்நிலையையும் திருந்ந போவதில்லை புரையோடி விட்ட இவர்கள் மனதை தன்னை சுற்றி உள்ள வர்கள் அனுபவிப்பதை பார்கும சூழ்நிலை ஏற்பட்டு திருந்தினால் உண்டு மனிதர்கள் தப்பை உணருவர் மதி கெட்ட மிருகங்கள் மாழ்வதுவரை உணருவது இல்லை

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

பெண்ணுடலின் மீது மட்டும் ஏன் இத்தனை வன்முறை?

  பாலியல் வன்முறை ஐந்தாறு நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தது, பெண்ணுடல் குறித்த சமூக தகவமைப்பு. கல்கத்தா மருத்துவர் மௌமிதா மீது நடத்தப்பட்ட மிக கொடுரமான பாலியல் வல்லுறவு வன்முறை அது. பெங்கால் ஆளும் கட்சியும், மத்தியில் இருக்கும் கட்சியும், பெங்கால் காவல்துறையும் இந்த வன்முறை குறித்து, மாறிமாறி ஒவ்வொரு விதமான குற்றச்சாட்டுகளை மற்றவர்கள் மீது முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மருத்துவக் கல்லூரியின் பிரின்சிபால் சந்தீப் கோஷ் விசாரணையில் இருக்கிறார். பெண் பித்து பிடித்த சஞ்சய் ராயை கைது செய்கிறார்கள். இந்த சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி வளாகம் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவ சமூகமே இன்று கொதித்து நிற்கிறது. உயிர் காக்கும் தொழில் என்பதால் இந்த போராட்டம் கவனப்படுத்தப்படுகிறது. காவல்துறையை தன் கைவசம் வைத்திருக்கும் மாநில அரசின் முதலமைச்சர், களத்தில் கொடி பிடிக்கும் பெண்களோடு கை கோர்த்து நின்று காமெடி செய்து, நடந்த கொடுரூரத்தைத் திசை மாற்ற முயற்சிப்பதை எல்லோரும் வேடிக்கை கூத்தாக பார்க்கிறோம். பெண்ணுக்கு எதிரான, பெண்ணுடலுக்கு எதிரான, பெண் சமூகத்துக்கு எதிரான கேலிக்கூ...